ஜாதி தலைவர்கள் மிரட்டல் -துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும்'


       ஜாதி கொடுமை தாங்க முடியவில்லை; எங்கள் சுயபாதுகாப்புக்கு, துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும்' என, வேற்று ஜாதியைச் சேர்ந்த இளைஞரை, காதல் திருமணம் செய்த பெண், தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தில் முறையிட்டு உள்ளார்.

கலப்பு திருமணம்

     தர்மபுரி மாவட்டம், வி.கொங்கரப்பட்டி, வேப்பமரத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா. இவர், ஆதிதிராவிடர் இனத்தவர். இவரும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும், மூன்றாண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, சுதீப் என்ற, ஒன்றரை வயது மகன் உள்ளான்.
   இந்நிலையில், சென்னையில் உள்ள, தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தில், சுதா நேற்று அளித்த புகார் மனு:
தர்மபுரி இளவரசன் - திவ்யா காதல் திருமண விவகாரத்துக்கு பின், ஊர் பஞ்சாயத்தார், எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.பொது குழாயில் தண்ணீர் பிடிக்கவும், ஊரில் உள்ள கோவிலுக்கு செல்லவும், தடை விதித்துள்ளனர்.இதுதொடர்பாக, பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 'எங்கள் குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது இருந்தும், எங்களை மிரட்டும் வேலையை, ஊரில் உள்ள ஆதிக்க ஜாதியினர் செய்து வருகின்றனர். எங்கள் பிரச்னை தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலும், பலன் கிடைக்கவில்லை.எங்கு சென்றாலும், எங்களை சுற்றி வந்து மிரட்டுகின்றனர். எங்கள் மீது அளிக்கப்படும் பொய் புகார்கள் மீது, காவல் துறையினர் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.

பொய் வழக்குகள்

       இதனால், எங்களின் அன்றாட வாழ்வு, மிகுந்த அச்சத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். எங்கள் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட எங்கள் இருவருக்கும், அரசு வேலை அளிக்க வேண்டும். எங்களின் உயிரை பாதுகாக்க, துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் சுதா கூறியுள்ளார்.